த.கருப்புசாமி எனும் நான் என்று தன் கம்பீரமான குரலில் தன் பதவி பிரமாணம் உரையைத் தொடங்க தொன்டர்கள் யாவரும் புல்லரித்து போனார்கள். ஊரெங்கும் உற்சாகம். பலருக்கும் வாழ்க்கையின் மேல் ஒரு படி அதிகமான பிடிப்பு ஏற்பட்டது.
பதவி பிரமாணம் நடக்கும் மாநகராட்சியில் இருந்து சுமார் 120 மைல் தொலைவில் வரதராஜ் தன் ஆதரவாளர்களுடன் தான் சார்ந்த கட்சியின் மாபெரும் வெற்றியை கொண்டாடினான். சுமார் 350 மைல் தொலைவில் கனகராஜ் தனது ஆதரவாளர்களுடன் வெற்றியை கொண்டாடினான்.
முதல்வர் தனது உரையை முடித்தக் கையோடு தனது கட்சியின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிக்கைக்கு முதல் கையெழுத்திட்டார்.
தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து பயணித்துக் கொண்டிருந்தது. அதில் பயணித்த சில அரசியல் ஆர்வலர்கள் தன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். அப்பேருந்தில் பயணித்த அக்கட்சியின் அடிமட்டத் தொண்டன் தனது சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்திருந்த மது பாட்டிலை திறந்து அருந்த ஆரம்பித்தான். நடத்துநருடன் சக பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று வரை நா.. நீ சொல்றதெல்லாம் கேட்டுகிட்டு இருந்தன் இன்னிலிருந்து எங்க ஆட்சி என்று கூறி ரகளை செய்தான்.
தன் முதல் கையெழுத்து முடிந்தவுடன் தன் தேர்தல் அறிக்கையை வாசித்து காண்பித்தார். மக்கள் அனைவரின் முகத்திலும் ஒரு எதிர்பார்ப்பு உருவாக தொடங்கியது. இறுதியாக இனிப்புகள் பகிரப்பட்டு பதவியேற்பு விழா இனிதே நிறைவுற்றது.
வரதராஜ் தன் கூட்டாளிகளுடன் அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினரை வரவேற்க மலர் மாலையுடன் காத்திருந்தான்.சில நிமிடங்களில் சட்டமன்ற உறுப்பினரின் கார் தன் படை பரிவாரங்களுடன் அவ்வீதியில் திரும்பியது. தலைவர் வாழ்க! தலைவர் வாழ்க! என்ற கோசங்கள் காதை கிழித்தன.
கனகராஜ் ஒரு படி மேலே சென்று ஆட்டம், பிரியாணி, மது என சகலமும் நிறைந்த வரவேற்பு அளித்தான். இப்பாடியாக அனைத்து தொகுதிகளிலும் இவர்கள் கை ஓங்க ஆரம்பித்தது.
முதல்வர் மாநிலத்தில் உள்ள பிரச்சனைகளை கண்டறிய மந்திரி சபையை கூட்டினார். அனைத்து மந்திரிகளும் தன் துறை சார்ந்த கோப்புகளுடன் அமர்ந்திருந்தார்கள். முதல்வர் ஒவ்வொரு துறையிலும் உள்ள பிரச்சனைகளை பொறுமையாக கேட்டறிந்தார்.
வரதராஜ் தன் கையில் ஒரு கோப்புடன் சட்டமன்ற உறுப்பினர் அறையில் நுழைந்தான். தன் தொகுதியில் எந்த வணிகம் சிறப்பாக நடைபெறுகிறது, யாரிடம் எவ்வளவு வாங்க வேண்டும் என அனைத்தையும் ஆலோசனை செய்தனர்.
கனகராஜ் சட்டமன்ற அலுவலகம் முன்பு கூடியிருந்த மக்களை அமைதி படுத்தி அனைவரின் புகார்களையும் வாங்கி கொண்டு உள்ளை நுழைந்து குப்பை தொட்டியில் தூக்கி எறிந்தான். பிறகு கையூட்டு பெறுவதற்காக மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் ஏறி இறங்கினான்.என்ன மிளகாய் சின்னாத இருக்கு இவ்ளோ விலை போட்டிருக்க என அதிகாரத்தை காண்பித்தாரன். கடுகு சிறுசா இருந்தாலும் காரம் கடுசா இருக்கு ன்னா என்றான் வியாபாரி.
இப்படியாக பல்வேறு தொகுதிகளிலும் காட்சிகள் அரங்கேறின. தன் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு தன் தொகுதியில் தன் வளத்தை வளர்த்துக் கொண்டனர்.வரதராஜீம் கனகராஜீம் நன்கு உழைத்தனர்.மாதந்தோறும் முதல்வரின் திட்ட அறிக்கைகள் நிரம்பி வழியும், சட்டமன்ற உறுப்பினர் மேஜை புகார்களாள் நிரம்பி வழியும்.
இப்படியாக ஐந்து வருடம் முடிந்தது. தேர்தல் கலம் அனல் பிறந்தது. பதவி ஏற்கும் விழா கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்வர் வேட்பாளர் ஒலிவாங்கியின் முன் வந்து நிற்க தன் இருக்கமான முகத்துடன் த.கருப்புசாமி தொலைக்காட்சி பெட்டியை அனைத்தார். தங்கமணி வரதராஜை ஏளனமாக பார்த்து நகர்ந்தான். கனகராஜ் வேலுமணியை பார்த்ததுமே திரும்பிச் சென்றான்.
- பிரவீன்
Prev NextGo Back