அழகாய் ஓவியம் வரைவான்,
வீட்டிற்குள் பல செடிகளை
நட்டு வளர்த்து வருகிறான்,
ரோட்டில் ஆதரவற்று வாழும்
முதியவர்களுக்கு தன்னால்
இயன்ற உதவிகளை செய்வான்,
தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுக்கு பேனா
பென்சில்களென வாங்கித் தந்து உற்சாகப்படுத்துவன்
ஓட்டப் பந்தயத்தில் பல பரிசுகளை வாங்கிக் குவித்திருக்கிறான்...
யாரேனும் உதவி கேட்டால்
தயங்காமல் செய்வான்,
சதுரங்கம் விளையாடுவதில்
கைதேர்ந்தவனாக இருந்தாலும்,
அரையாண்டு தேர்வில் கணக்கு பாடத்தில் தேர்ச்சியடையாத தன்னை
நீ எதற்கும் இலாயக்கில்லை
என ஆசிரியர்
திட்டும் திட்டுகளை புன்னகையோடு கடந்துகொண்டிருந்தான் அவன்!
- மு.முபாரக்
Prev NextGo Back